search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாறு ஆறு"

    • 43 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன.
    • அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.

    திருவான்மியூர்:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி மாதவரம் பால்பண்ணை -சிறுசேரி சிப்காட் வரையும் (45.4கி.மீட்டர்), கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரையும் (26.1கி.மீட்டர்), மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையும் (44.6கி.மீட்டர்) என மொத்தம் 116.1 கி.மீட்டர் தூர நீளத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.

    இதில் மொத்தம் 76 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள், 43 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் என மொத்தம் 119 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன. 73.5 கி.மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாதையும், 42.6 கி.மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. இதில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் 28 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களும், 19 உயர்நிலை ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.2 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'காவேரி' சுரங்கப் பாதை அமைத்து திரு.வி.க., பாலம் அருகே அடையாறு ஆற்றை கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்துக்கு சென்றடைய உள்ளது.

    முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் இதுவரை 560 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து உள்ளன. 2-வது எந்திரம் மூலம் 200 மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் பருவ மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றால் தாமதமாகி வந்த அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது. அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில், சுரங்கப்பாதை பணி அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது. அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான, ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.

    மிச்சாங் புயல் காரணமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மத்திய குழுவிடம் வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அதில் வெள்ளத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

    2015-ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு மாநில அரசு மாவட்ட நிர்வாகம் நீர் வழித்துறை அடையாறு ஆற்றை அகலப்படுத்துவது கரைகளை பலப்படுத்துவது, மதகுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனாலும் வெள்ள சேதத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை.

    எதிர்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களிடம் தெரிவித்து கொள்கிறோம்.

    அடையாறு ஆறு மற்றும் கரைகளை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும். அடையாறு ஆற்றை 10 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்டதாக அமைக்க வேண்டும். அடையாறு ஆற்றின் இருபுறமும் ஒரு சில இடங்களில் மட்டும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆற்று பகுதி அனைத்து இருபுறத்திலும் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண் டும். தற்போதுள்ள தடுப்பு சுவர் உயரத்தில் இருந்து கூடுதலாக 4 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். மழைக்காலங்களில் ராட்சத மோட்டார் பம்புகள் அமைத்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீரை ஆற்றில் விட வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் அடையாறு ஆற்றில் விடுவ தற்கு பதிலாக முட்டுக்காடு வழியாக கடலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியை 4 அடிக்கு குறையாமல் தூர்வார வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தூர்வார வேண்டும். இதனால் ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கும். அதிகபடியாக தண்ணீர் வெளியேற்றத்தை தடுத்தும் அடையாற்றின் மேல் வெளிவட்ட சாலையில் கட்டப்பட்ட பாலம் அகலம் குறைவாக உள்ளதால் ராயப்பா நகர் பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது.

    எனவே ராயப்பா நகரில் கூடுதல் பாலம் அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.

    கடந்த காலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ள வரதராஜபுரம் பகுதி முழுவதும் தரமான சாலைகள் அமைக்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு சிறப்பு சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை குழுவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து வெள்ளத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    • சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
    • பதட்டத்தை தணிக்க சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தாம்பரம்:

    சென்னை அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து 700 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகு நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை உயர்நீதிமன்றமும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அடையாறு ஆற்றின் கரையோரம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை ஏற்கனவே இருமுறை வருவாய் துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள டோபிகானா தெருவில் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகளை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அங்கு பதட்டத்தை தணிக்க சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் பல்லாவரம்- குன்றத்தூர் சாலையில் அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    • சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிக்கிறது.
    • திருவிக ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ்,கார், சென்று வருகின்றன.

    சென்னை நகரில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்று அடையாறு ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் இந்த ஆறு உருவாக்குகிறது. இந்த ஆறு சென்னையில் உள்ள அடையாறு முகத்துவாரம் பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. இந்த ஆறு 42.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது ஆகும்.

    சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புக்கு இந்த ஆறு பங்களிக்கிறது. அதிக மாசு அளவு இருந்தபோதிலும், படகு மற்றும் மீன்பிடித்தல் இந்த ஆற்றில் நடைபெறுகிறது. சென்னை நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர், போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது.

    இந்த நிலையில் சென்னை அடையாறு ஆற்றங் கரையோரப் பகுதியான ஈக்காட்டுத் தாங்கல், கிண்டி தொழிற்பேட்டைக்கு பின்புறம் உள்ள பகுதிகள் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. இதுபற்றி புகார் எழுந்ததையடுத்து சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்கு முன் குப்பை கொட்டிய கரையோர பகுதிகளை சுத்தம் செய்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. அதன் முந்தைய பரிதாப நிலையே அங்கு மீண்டும் உருவாகி உள்ளது. இதனை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    மேலும் அடையாறு ஆற்றுப்பாலத்தில் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் பாலத்தின் சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து உள்ளன. எனவே அதனை முறையாக பராமரிப்பு பணிகள் செய்து பாலத்தை சீரமைக்க வேண்டும்.

    அடையாறு திருவிக ஆற்றுப்பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ்,கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன. ஏராளமான பொதுமக்களும் இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இப்பாலம் பழுதடைந்து உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், தூண்களில் மரம், செடி, கொடிகள் முளைத்து வளர்ந்து உள்ளன. பாலத்தை சரிவர பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    பாலத்துக்கு கேடு விளைவிக்கும் மரம், செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். பாலத்தின் கரையோர பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகில் உள்ள புதர்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளன. மேலும் இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. வரும் மழைக்காலங்களின் போது இவைகள் தண்ணீர் போக்குவரத்தை தடைசெய்ய வாய்ப்புகள் உருவாகும்.

    அடையாறு ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகள், குப்பைகள் அகற்ற வேண்டும். அடையாறு ஆற்றின் கரையினை மேலும் விரிவுபடுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் பெருவெள்ளம் புகுந்தது போன்ற நிலை மீண்டும் உருவாகக்கூடாது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    கூவம் ஆற்றின் கரை யோரப் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. எனவே அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மற்றும் சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை ஆகியவை ஒருங்கிணைந்து, ஆறுகள் மற்றும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறது.

    தமிழகஅரசு அதிகநிதி செலவழித்து அடையாறு மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு குடிசைகளில் வசித்த மக்கள் அகற்றப்பட்டு மறு குடியமர்வு செய்யப்படுகிறார்கள்.

    தூர்வாருதல் மற்றும் ஆற்றின் கரையோரம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. 24 கி.மீ. தூரத்திற்கு வேலி அமைக்க திட்டமிட்டு 50 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கரையோர பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கரையோர பகுதிகளில் 4.53 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • படிப்படியாக மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரே நாளில் பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் கட்டுக்கடங்காமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னை நகரின் பல பகுதிகளும் வெள்ளக் காடானது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்த குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அங்கு 9500 குடும்பங்கள் வசித்து வந்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் படிப்படியாக மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 4,500 குடும்பங்கள் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.

    கோட்டூர்புரம் சித்ரா நகரில் அடையாறு ஆற்றின் கரையோரம் 206 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடத்தில் மறுகுடி யமர்வு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டன. இந்த 206 குடும்பங்களும் மறைமலை நகர் அருகில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து அங்கு வசித்த பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் கோட்டூர்புரம் சித்ரா நகரில் இருந்து புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு சென்றதும் கோட்டூர்புரம் சித்ரா நகரில் புல்டோசர் அடையாறு ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. தற்போது ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    • கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ரூ.61,843 கோடி செலவில் 3 வழித் தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இதில் மாதவரம்-சிப் காட் இடையேயான வழித்தடத்தில் அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. கிரீன் வேஸ் சாலையை அடையாறு பகுதியுடன் இணைக்க இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    4 மாதங்களுக்கு முன்பு கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக காவேரி எனப்படும் சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி அடுத்து அடையாறு ஆற்றின் கீழே தண்ணீருக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த சவாலான பணியில் ஈடுபட நூற்றுக் கணக்கான ஊழியர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் அடையாறு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபடும்.

    மற்ற 2 எந்திரங்கள் மந்தவெளியை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும். இதில் காவேரி என்ற எந்திரம் மட்டும் 150 மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றின் கீழ் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். இந்த பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மொத்த தூரம் ஒரு கிலோ மீட்டர் ஆகும்.

    ஆற்றுபடுகையின் மட்டத்தில் பொதுவாக சிறிய மாறுபாடு இருப்பதாலேயே தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க கடினமாக இருக்கும். அதற்கு ஏற்ப சுரங்கம் தோண்டும் எந்திரத்தில் அழுத்த அளவுகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

    ஆற்றுப்படுகையின் ஆழம் சுமார் 3 முதல் 5 மீட்டர் ஆகும். அதற்கு கீழே 11 முதல் 13 மீட்டர் வரை துளையிட வேண்டும். இதன் மூலம் ரெயில் மட்டம் 18 மீட்டர் ஆக இருக்கும். அதற்கு ஏற்ப கவனமாக அளவிட்டு சுரங்கம் தோண்ட வேண்டும்.

    அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. சுரங்கப்பாதை தோண்டும் போது இதில் மாறுபாடு காணப்படலாம் என அதற்கும் தயாராக இருக்க வேண்டும். சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் சில வாரங்களில் ஆற்றுப்படுகையை அடையும்.

    சவாலான சூழ்நிலைகள் காரணமாக இந்த சுரங்கப் பாதை பணிகளை முடிக்க 5 முதல் 6 மாதங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனர்.
    • ராமச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

    சென்னை:

    அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் மீது இன்று காலை சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் மந்தைவெளியை சேர்ந்த ராமச்சந்திரன். வயது 36 என்பது தெரியவந்தது. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

    இதுகுறித்து ராமச்சந்திரனின் தந்தை லோகநாதன் போலீசாரிடம் கூறுகையில், 'எனது மகன் நேற்று காலை பணிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க செல்லும்போது திரு.வி.க. பாலத்தில் எனது மகனின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

    வாகனத்தின் மீது செல்போன் மற்றும் ஆவணங்கள் வைக்கப் பட்டிருந்தது. நெடுநேரமாகியும் வராததால் போலீசில் தகவல் கூறினேன்.

    இந்நிலையில் எனது மகன் உடல் ஆற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. ராமச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவரது மொபைல் எண்ணில் கால் ஹிஸ்டரி டெலிட் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கான காரணங்கள் என்ன? கால் ஹிஸ்டரி மற்றும் மெசேஜ்கள் எதற்காக அழிக்கப்பட்டுள்ளன என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
    • நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று நீர் வளத்துறை கொள்கை விளக்க குறிப்பின் மீது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    2018-ம் ஆண்டில் சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் அடையார் ஆற்றின் தொடக்கத்தில் இருந்து முகத்துவாரம் வரை சீரமைப்பு பணிகள் ரூ.555.46 கோடி மதிப்பீட்டில் 56 குறுகியகால உப திட்டங்களாக 7 துறைகளின் மூலம் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டது, இதில் திருநீர்மலை முதல் அடையாறு முகத்துவாரம் வரை ஏழு நிலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு ரூ.104.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.73.13 கோடி மதிப்பீட்டிலான 5 பணிகள் முடிவுற்றுள்ளது.

    மேலும், சென்னை மாவட்டத்தில் ரூ.21.63 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் முதல் திரு.வி.க. பாலத்தின் கீழ்புறம் வரை அகலப்படுத்தி தூர்வாருதல் பணிக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    பெருநகர சென்னை நீர் வழிகள் மற்றும் நீர் நிலை களை புதுப்பித்து மறுசீரமைக்க பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் தொடர் வடிகால்கள், அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் பெரிய வடிகால்களை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியுடன் ரூ.1281.88 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் நீர்வளத்துறைக்கு ரூ.1014.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் வரதராஜபுரம், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், பள்ளிக்கரணை, ராயப்பா நகர், நந்திவரம், கூடு வாஞ்சேரி, மணலி, வெள்ளி வாயில், கொளத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு அடையாறு மற்றும் கொசத்தலை ஆறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங்களை மேம்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற 8 வெள்ளத்தணிப்பு பணிகளை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிஜிட்டல் முறையை பயன்படுத்தி ஆறுகளை கணக்கெடுப்பதன் மூலம் ஆற்றின் எல்லைகளை வரைபடமாகவும் தயாரிக்க முடியும்.
    • சென்னையில் கூவம் ஆற்று பகுதியில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    சென்னை:

    கூவம், அடையாறு ஆறுகளில் நீர்வழிப்பாதைகளை கண்காணிக்க டிஜிட்டல் மூலம் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

    ஆற்றின் எல்லைகளை மிகவும் துல்லியமாக கண்காணிக்க டி.ஜி.பி.எஸ். எனப்படும் டிபரன்ஷியல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது.

    டிஜிட்டல் முறையை பயன்படுத்தி ஆறுகளை கணக்கெடுப்பதன் மூலம் ஆற்றின் எல்லைகளை வரைபடமாகவும் தயாரிக்க முடியும்.

    ஆறுகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களை நிர்வகிக்கும் குழுவினர் எதிர்காலத்தில் ஆறு பகுதிகளை யாராவது ஆக்கிரமித்தால் அதை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும். இதன்மூலம் ஆக்கிரமிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும்.

    சென்னையில் கூவம் ஆற்று பகுதியில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். கோர்ட்டு வழக்குகள் காரணமாக இன்னும் 1000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இந்த டிஜிட்டல் முறை அமலுக்கு வந்தால் ஆக்கிரமிப்பு பிரச்சினை இருக்காது. இந்த பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதன்பிறகு ஆறுகளின் எல்லைகளை அளவிடும் பணி துரிதப்படுத்தப்படும்.

    நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும், நீர்த்தேக்க செயல்பாடுகளை கண்காணிக்கவும் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது.

    • ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும்.
    • நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.

    சென்னை:

    சென்னை நகரில் பாயும் முக்கிய ஆறுகளாக கூவம், அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளன. தற்போது இந்த ஆறுகளின் தண்ணீர் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

    இதனை சரி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர் நிலைகளும் பயன்படுத்த முடியாத அளவில் இருப்பது தெரிய வந்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் அடையாற்றில் 23 இடங்களிலும், கூவம் ஆற்றில் 18 இடங்களிலும் பக்கிங்காம் கால்வாயிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது.

    இதில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எதிலும் கரைந்த ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதனால் இந்த நீரில் எந்த வகை உயிரினங்களும் வாழ தகுதி இல்லாதவையாக மாறி இருக்கிறது.

    ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும். இதேபோல் ரசாயன ஆக்சிஜன் 30 வரை இருக்கலாம்.

    சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் 20-க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால் நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 56-க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கூவம் மற்றும் பெருங்குடியில் இருந்து அடையாற்றில் கலக்கிறது.

    இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆறுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டன.

    தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதிபடுத்தி உள்ளது.

    நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இனி அரசால் எதுவும் செய்ய முடியாது' என்றார்.

    ×